கோவை : உக்கடம் பெரிய குளத்தில், 50 சென்ட் நீர் பரப்பில், 1.45 கோடி ரூபாயில் ‘மிதக்கும் சோலார்’ அமைக்கப்படுகிறது. நாளொன்றுக்கு, 693 யூனிட் மின்னுற்பத்தி கிடைக்குமென கணக்கிடப்பட்டுள்ளது.’நமக்கு நாமே’ திட்டத்தில், காய்கறி கழிவில் காஸ் தயாரிக்கும் திட்டத்துக்கு, சுவிட்சர்லாந்து துாதரகம், ஏற்கனவே நிதி வழங்கி, கோவை பாரதி பார்க் வளாகத்தில் செயல்படுத்தப்படுகிறது. இதே போல உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் அமைக்க நிதி ஒதுக்கியது.அதில், 1.45 கோடி ரூபாயில், மிதக்கும் சோலார் மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்படுகிறது. 50 சதவீத பங்களிப்பாக, 72.50 லட்சம் ரூபாயை சுவிட்சர்லாந்து துாதரகம் வழங்குகிறது. மீதமுள்ள, 72.50 லட்சம் ரூபாயை தமிழக அரசு வழங்குகிறது. உக்கடம் குளத்தில், 50 சென்ட் நீர் பரப்பில், 280 சோலார் தகடுகள் மிதக்க விடப்பட்டுள்ளன. மின் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது.
