காசாவில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 15 மாத காலமாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வர உள்ளது. போர்நிறுத்தம் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், இதற்காக நடவடிக்கை எடுத்த அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் ட்ரம்ப் மற்றும் தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார். போர் நிறுத்தத்துக்கான மத்தியஸ்தப் பணியில் அமெரிக்கா மற்றும் கத்தார் நாடுகள் ஈடுபட்டன. காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்தை இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக் கொண்டதாக இவ்விரு நாடுகளும் தெரிவித்துள்ளன. இந்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகு அது வரும் ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வரும் என்று கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி தெரிவித்தா். போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததும் முதல் ஆறு வாரம் இரு தரப்பினரும் ‘அமைதியாக’ இருக்க வேண்டும் என்று கத்தார் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர், “இந்த காலகட்டத்தில், இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு பதிலாக, ஹமாஸ் பிடியில் உள்ள பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் 33 பேர் விடுவிக்கப்படுவார்கள். காசாவின் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளிலிருந்து இஸ்ரேலிய படைகள் கிழக்கு நோக்கி பின்வாங்கும். இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். மேலும், நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் உதவிப்பொருட்கள் ஒவ்வொரு நாளும் காசாவுக்குள் செல்ல இஸ்ரேல் அனுமதிக்கும். மீதமுள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவது, இஸ்ரேலிய துருப்புக்கள் முழுமையாக திரும்பப் பெறுவது, ‘நிலையான அமைதிக்கு’ திரும்புவது போன்றவற்றுக்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் 16வது நாளில் தொடங்கும்.” என தெரிவித்துள்ளார்.
