ஆபரேஷன் சிந்தூர்: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்தது என்ன? சிந்தூர் தாக்குதலுக்கு அடுத்தது என்ன என்ற பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பதிலடியை எதிர்கொள்வது குறித்து பாதுகாப்பு துறை விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவைக் கூட்டமும் நடைபெறுகிறது. அதேபோல் காஷ்மீர் முதல் உமர் அப்துல்லா தலைமையில் அம்மாநில அமைச்சரவைக் கூட்டமும் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் தாக்குதலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீர் மட்டுமல்லாது நாடு முழுவதுமே டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில், இந்தியாவின் தாக்குதலை போர் நடவடிக்கையாகவே பார்ப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். மேலும் இந்தத் தாக்குதலுக்கு உரிய நேரத்தில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி தாக்குதலையும் பாகிஸ்தான் தொடங்கியுள்ளது. இந்தியா – பாகிஸ்தானின் சர்வதேச எல்லைப் பகுதியான எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு (எல்ஓசி) அருகே பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்தியக் குடிமக்கள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதலால் ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச், குப்வாரா மற்றும் பாராமுல்லா மாவட்டங்களில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதலை அடுத்து எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே அமைந்துள்ள மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி எல்லையோரத்தில் வசிக்கும் மக்கள் இடம்பெயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
