காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில், சாம்சங் நிறுவனத்தின் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கு, பணியாற்றும் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் அளித்தல் உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 9ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கைவிட, தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் அரசு தரப்பில் ஏழு கட்ட பேச்சு நடத்தியும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சி.ஐ.டி.யு., சங்கத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் வரை போராட்டம் தொடர்வதாக, சாம்சங் நிறுவன சி.ஐ.டி.யு., தொழிலாளர் சங்க தலைவர் முத்துக்குமார் தெரிவித்தார். பேச்சில் உடன்படாத தொழிலாளர்கள் நேற்று, 26வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் அடுத்தகட்டமாக, வரும் 21ம் தேதி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளின் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, சாம்சங் சி.ஐ.டி.யு., தொழிலாளர் சங்க தலைவர் முத்துக்குமார் தெரிவித்தார்
